இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அதிவேகமாக சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்ததில் ஒருவர் உயரிழந்துள்ளார். கார் கால்வாய்க்குள் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளது.
நண்பரின் திருமணத்திற்காக, நண்பர்கள் மூன்று பேர் மதுரையில் இருந்து இராமநாதபுரம் தொண்டிக்கு, மதுரை- ராமேஷ்வரம் சாலையில் சிவப்பு நிற டவேரா காரில் சென்றுள்ளனர். பரமக்குடியை அடுத்த நான்கு வழிச் சாலையான வேந்தோணி பகுதியில் கார் மிக வேகமாக சென்றபோது, இருபுறச் சாலைக்கு பொதுவான தடுப்பில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவமானது நள்ளிரவு இரண்டு மணி அளவில் நடந்துள்ளது.
மேலும் கிடைத்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பார்க்கும்போது அதிவேக கட்டுப்பாட்டினை இழந்த கார், அங்குள்ள சாலையின் தடுப்பில் மோதி கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது. இவை அனைத்தும் கண்ணிமைக்கும் நொடியில் அரங்கேறி இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பாலமுருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மூன்று பேர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குடிபோதையில் காரை ஓட்டி இருப்பதால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மேலும் இச்சம்பவம் குறித்து பரமக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்ப்பதற்கே மனதை பதறவைக்கும் இக்காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
வாகனங்கள் ஓட்டும் போது குடியை தவிர்த்து கவனமுடன் பயணித்தால் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.