கொரோனா பெருந்தொற்று காரணமாக உலக நாடுகளிடையே பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கனடாவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் அங்கு பல்வேறு போராட்டங்களும், வன்முறைகளும் நிகழ்ந்து வருவதால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கு அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார்.
அதாவது கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி என்று அறிவித்திருந்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தான் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கனடா பிரதமர் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரித்து வந்தன.
இதனிடையே தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா லாரி டிரைவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா கனடாவை இணைக்கும் பாலமாக தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். லாரிகளை அம்பாசிடர் பாலத்தில் வழிமறித்து நிறுத்தியதால் அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. அதன்பின் கனடா போலீசார் வந்து நிலைமையை சீர் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் லாரி டிரைவர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்து வருவதால் கனடா பிரதமர் அங்கு அவசரநிலை பிரகடனத்தை கொண்டு வந்துள்ளார். தற்போது கனடாவில் அவசரநிலை பிரகடனப்பட்டுள்ளதால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அவசர நிலை பிரகடனத்தால் கனடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.