இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது. அதேப்போல், தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை அணியை மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்துள்ளது, இந்திய அணி!
இந்நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அடுத்ததாக இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது, காரணம் என்னவெனில், நடைபெற இருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டி என்பதே ஆகும்.
இதனை அறிந்த பல கிரிக்கெட் ரசிகர்களும் தற்போதே விராட் கோலி அவர்களுக்கு தங்களின் அன்பை, வாழ்த்து மழையாக சமூக வலைத்தளங்களில் பொழிந்து வருகினற்னர். ரசிகர்கள் மட்டும் அல்லாது சக கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் இந்திய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்ப்ரீத் பும்ரா அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், விராட் கோலி அவர்களின் 100-வது டெஸ்ட் போட்டி குறித்து கூறியுள்ளார். அப்பேட்டியில் நம் தேசத்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது உண்மையிலேயே ஒரு வீரருக்கு சிறப்பு வாய்ந்த சாதனையாகும். இது அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த சான்று. இந்நிகழ்வு அவருக்கு இன்னொரு பெருமைப்படத்தக்க சாதனையாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்காக ஏராளமான பங்களிப்பை அளித்திருக்கிறார். வருங்காலத்தில் இன்னும் நிறைய பங்களிப்பார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றும் என்று பும்ரா கூறினார்.
இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.