அரசுமுறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், நேற்று இந்தியா வந்தார். முன்னதாக குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவருக்கு இந்திய பாரம்பரிய நடனங்களின் மூலமும் இசைக்கருவிகளின் மூலமும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் குஜராத் மாநில முதல்வர், பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில ஆளுநர் போன்றோர் அவரை வரவேற்றனர்.
பின்பு, போரிஸ் ஜான்சன் அங்கிருந்து நேராக காந்தி ஆசிரமம் சென்றார். அங்கு சென்று காந்தியடிகளின் இராட்டினத்தில் நூல் நூற்றார். மேலும், அகமதாபாத்திலிருக்கும் இந்திய முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று குடியரசு மாளிகை சென்றார். அப்போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியும் அவரை வரவேற்றார். இந்திய இராணுவத்தினரின் முப்படை மரியாதையும் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய நாட்டின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது போரிஸ் ஜான்சன், இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அவர், இப்போது இருந்த இங்கிலாந்து இந்தியா உறவுநிலை வேறு முன்பு எப்போதும் இருந்ததில்லை எனவும், தற்போது இருநாடுகளிடையே உறவானது வலுவாகவும் சிறப்பாகவும் இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், உலக நாடுகளில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருப்பதாக குறிப்பிட்டார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் போரிஸ் ஜான்சன், டெல்லி ராஜ் கூட் பகுதியில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரின் சந்திப்பு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் முக்கியமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைன் ரஷ்யா போர் குறித்தும், இருநாடுகளிடையே வணிகத்தடைகளை குறைக்கவும் புதிய வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து ஒரு பில்லியன் பவுண்டுகளில் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இங்கிலாந்தில் 11 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இ-பேருந்துகள் மற்றும் சென்னையில் ஆசிய பசுபிக் தலைமையகம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனைங்களின் முதலீட்டால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனமான மாஸ் டெக் அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்தில் முதலீடு செய்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உள்ளதகாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள், மீண்டும் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் பிரதமர்- என்ன சொன்னார் தெரியுமா?