மஹேந்திர சிங் தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே உள்ள பந்தம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்திற்கும் தோனிக்குமான உறவு மிகவும் நெருக்கம் அடைந்தது. தோனியின் மீது சென்னை ரசிகர்களால் காட்டப்படும் அன்பிற்கு அளவீடு என்பதே இல்லை.
இந்தியாவில் உள்ள பல கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் உள்ளுக்குள்ளாவது சென்னைக்கும் தோனிக்கும் இடையே உள்ள பிணைப்பை பற்றி பொறாமை எழுந்திருக்கும். மகிழ்ச்சி ததும்பியிருக்கும். ஆச்சரியம் இருக்கும். சென்னை ரசிகர்கள் வெறுமனே வெற்றியின் போது மட்டும் அல்ல தோல்வியின் போதும், இக்கட்டான காலங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தோனிக்கும் பக்க பலமாய் நின்றுள்ளனர்.
தோனியின் மீதான தமிழக ரசிகர்களின் காதல் ஒரு தலை காதல் அல்ல! இரு பக்கமும் நேரும் காதல்! சென்னையிடம் இருந்து மட்டும் தோனிக்கு அன்ப செல்வதில்லை. தோனியிடம் இருந்தும் சென்னைக்கு, சென்னை ரசிகர்களுக்கு அன்பு பரிமாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த அன்பு பரிமாற்றங்கள் இன்று நேற்று நிகழ்வதல்ல. இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னே நிகழ்ந்தவை. இருப்பினும் இந்த அன்பு பரிமாற்றங்கள் அதிகரித்தது இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் ஆரம்பித்த பிறகுதான் என்ற உண்மையையும் மறைக்க இயலாது.
தோனி..தோனி..தோனி என்று மற்ற மைதானங்களில் கேட்கும் ஆர்ப்பரிக்கும் குரல்களுக்கும், சென்னை மைதானத்தில் தோனி..தோனி..தோனி என்று கேட்கும் குரல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நம்மால் எளிதில் அடையாளம் கண்டு விட முடியும். குரல்களின் வீரியமாக இருக்கட்டும், வெளிப்படும் தோரணையாக இருக்கட்டும் மற்றவைகளை விட சென்னையில் நிகழ்பவை சற்று உயர்ந்தே காணப்படும்.
தோனியும் தன்னுடைய பல இன்டெர்வியூக்களில் சென்னையை பற்றியும், சென்னை அணியினை பற்றியும், சென்னை ரசிகர்கள் பற்றியும் பல முறை கூறியுள்ளார். சென்னை பற்றி பேசாத தோனியின் தனிப்பட்ட இன்டெர்வியூக்கள் கடந்த பதினான்கு வருடங்களில் மிகவும் குறைவே! இல்லை என்றும் சொல்லலாம்.
அதென்ன பதினான்கு வருடம் என்ற கேள்வி உங்களுக்கு எழும்புமேயானால், அதற்கான பதில் என்னவவெனில் இவ்வருடத்துடன் சென்னை அணியில் தோனி தனது பதினான்கு வருடமாகிறது என்பதே! சென்னை அணியில் பதினான்கு வருடமாய் தோனி இருப்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இப்பதிவு தற்போது ட்ரெண்ட் ஆகி கொண்டிருப்பதுடன், பலரும் தோனிக்கும் சென்னை அணிக்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.