பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீப காலங்களில் எப்போதும் இல்லாதது போல் பாகிஸ்தானுக்கு பிற நாட்டு அணிகளை வரவழைத்து கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இம்முயற்சிக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவுகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது கூட பாகிஸ்தானில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இச்சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா அணியானது மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியிலும் விளையாட உள்ளது. பாகிஸ்தானில் சுமார் 22 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் ஆல் – ரவுண்டர் ஆஷ்டன் அகருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தகவல்கள் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளன. அத்தகவலின்படி, “உங்கள் கணவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால் அவர் உயிருடன் நாடு திரும்ப மாட்டார்” என ஆஷ்டன் அகரின் மனைவிக்கு சமூக வலைதள பதிவு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலைப் பற்றி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அறிவிப்புகள் ஏதும் வராத நிலையில், தற்போது அறிவிப்பு ஒன்று வந்துள்ளது.அதன்படி, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கொலை மிரட்டல் ஏதும் நேரடியாக வரவில்லை என்றும், சமூக வலைதள பதிவு குறித்து நாங்கள் அறிவோம் என்றும் இந்நிகழ்வு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் இரு நாட்டின் அரசு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது மாதிரியான சமூக வலைதள பதிவுகளை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கவில்லை எனவும் இப்பொழுது இது குறித்து வேறெதுவும் சொல்வதற்கு இல்லை எனவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.