கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு புதுமுகக் கல்லூரியில் கடந்த மாதத் தொடக்கத்தில் ஹிஜாப் அணிந்து வந்த 12 இஸ்லாமிய மாணவிகளை வளாகத்தில் நுழைய அனுமதித்த கல்லூரி நிர்வாகம், வகுப்புகளுக்கு அனுமதிக்க மறுத்தது. இது பெரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளது.
தற்போது, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவித் துண்டு அணிந்து போராட்டம் நடத்தி வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது. பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வு குறித்து பல தலைவர்களும் கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், மத நம்பிக்கைகளையும், அடையாளங்களையும் கடைபிடிக்கும் விஷயத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது எனவும் சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து கொள்ளவும், கிறித்தவர்கள் சிலுவை அணியவும், இந்துக்கள் பல வகையான திலகங்கள், திருநீறு பூசிக் கொள்ளவும் அனுமதிக்கிறது. அதன் நீட்சியாகவே ஹிஜாப் அணிவதையும் பார்க்க வேண்டும் என்றார்.
எந்த மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் கல்வி கற்கிறார்களா? என்பது தான் முக்கியமே தவிர, எந்த ஆடை அணிகிறார்கள் என்பது முக்கியமில்லை. பெண்கள் கல்வி கற்பதற்கு மதக்கட்டுப்பாடுகளும், அடையாளங்களும் தடையாக இருந்தால் அவை அகற்றப்பட வேண்டும் எனவும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி தான் முக்கியமே தவிர, ஆடை அல்ல
மேலும், அன்புமணி இராமதாஸ் ’’இந்தியாவில் பெண்கள் இப்போது தான் கல்வி கற்று முன்னேறத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு இப்போது தான் கல்வி வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. எனவே, தோற்பது எதுவாக இருந்தாலும் வெல்வது பெண் கல்வியாக இருக்க வேண்டும். இதை உணர்ந்து ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கல்வி, அமைதி, நல்லிணக்கம் மட்டுமே கோலோச்ச வேண்டும்; இதை அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.
இதையும் படிங்க; தொடரும் ஹிஜாப் கலவரம் : வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றம் !!