முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து தமிழக அரசுடன் பேச்சு நடத்தப் போவதாகவும் கேரள அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு பல தமிழக அரசியல் பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர், அன்புமணி இராமதாஸ் அவர்கள் கேரளாவின் இந்த முன்னேடுப்பை கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிடக் கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டினார், அன்புமணி இராமதாஸ்.
மேலும், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு குறைந்தது 5 முறையாவது அணையை ஆய்வு செய்து, அணை வலிமையாக இருப்பதாக சான்று அளித்துள்ளது. இத்தகைய சூழலில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளம் கூக்குரல் எழுப்புவது இரு மாநில உறவுகளை சீர்குலைத்து விடும் என்றார்.
”முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என்றும், அதுகுறித்து தமிழகத்துடன் பேச வேண்டும் என்றும் கேரளம் பிடிவாதம் பிடிப்பதன் நோக்கம், அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதை தாமதிக்க வேண்டும் என்பது தான். முல்லைப்பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரள பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அதைத் தடுக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கு கேரளம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
”முல்லைப்பெரியாறு அணை குறித்து பேச்சு நடத்த கேரள அரசு எத்தனை முறை அழைப்பு விடுத்தாலும் அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது. கடந்த காலங்களில் உச்சநீதிமன்ற அறிவுரைப்படியும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் பல முறை நடத்தப்பட்ட இரு தரப்பு பேச்சுகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, முல்லைப்பெரியாறு சிக்கலுக்கு தீர்வு காண்பது தான் தாமதமானது.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை என்ற பெயரில் தமிழக அரசுடன் பேச்சு நடத்த வேண்டும்; அந்தப் பேச்சு தோல்வியடைந்து விட்டால் அதைக் காரணம் காட்டி, உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர வேண்டும்; அதன் மூலம் அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படுவதை தாமதப்படுத்தி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள விடுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே கேரள அரசின் நோக்கமாகும். கேரள அரசின் இந்த சூழ்ச்சிக்கு தமிழகம் ஒருபோதும் இரையாகக்கூடாது.
முல்லைப்பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தான் தமிழக அரசின் முதல் இலக்காக இருக்க வேண்டும். அதற்கு கேரளத்தின் தரப்பில் போடப்படும் முட்டுக்கட்டைகளை தகர்த்து, பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட உச்சநீதிமன்ற அனுமதியை பெற வேண்டும். அதன்பின் பேபி அணையை வலுப்படுத்தும் பணியை நிறைவு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்.