காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று உறுதியாக நம்புவதாகவும், அது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருப்பது சர்ச்சையையும், அதிர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி இராமதாஸ் கொடுத்த குரல்
இப்படியான சூழலில்தான், மேகேதாட்டு அணை சிக்கல் தொடர்பான மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தின் கருத்துகள் தேவையற்றவை என்றும், மேகேதாட்டு அணை சிக்கலுக்கான தீர்வு அங்கு அணை கட்டுவது அல்ல; மாறாக, அங்கு சட்டவிரோதமாக அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் என குரல் கொடுத்துள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ்.
மேலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் நீதிபதியாக செயல்பட வேண்டிய ஷெகாவத் கர்நாடக வழக்கறிஞராக மாறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டக்கூடாது என்பதை உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் அவற்றின் தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கின்றன. அதன்படி மத்திய அரசு நடந்தாலே போதுமானது. அதுவே சிக்கலைத் தீர்த்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்
‘மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொண்டிருப்பதாகவோ, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அம்மாநில அரசுக்கு சாதகமாக பேசுவதைப் போன்றோ தோன்றுகிறது. இது தவறானது. நடுநிலையாக செயல்பட வேண்டிய அவர், கர்நாடகத்துக்கு ஆதரவாக பேசக்கூடாது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது; இந்நிலைப்பாட்டை ஷெகாவத் மாற்றிக் கொள்ள வேண்டும்’ எனவும் அன்புமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அன்புமணி இராமதாஸின் வலியுறுத்தல்
இறுதியாக, மேகேதாட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் மிகத் தெளிவாக உள்ளன என்றும் உச்சநீதிமன்றத்தில் இப்போது நிலுவையில் உள்ள வழக்கிலும் தமிழகத்திற்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டவர், “இத்தகைய சூழலில் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தினால், அது தமிழகத்தின் உரிமைகள் பறிபோவதற்கு தான் வழி வகுக்கும். எனவே, மேகேதாட்டு விவகாரம் குறித்து இருதரப்பு பேச்சு நடத்துவதற்கான அழைப்பு மத்திய அரசிடமிருந்து வந்தாலும் கூட அதை தமிழக அரசு ஏற்கக்கூடாது. மேகேதாட்டு அணை விவகாரத்திற்கு உச்சநீதிமன்றம் மூலமாக மட்டுமே தீர்வு என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தவும் செய்தார், அன்புமணி இராமதாஸ்.