தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தை பொறுத்தமட்டில் தற்காலத்தில் பல குளறுபடிகள் நடந்து வருவதாகவே அறியமுடிகிறது. அதை மீண்டும் நிறுபிக்கும் வகையில், ஒரு நிகழ்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரங்கேற்றியுள்ளது.
அந்நிகழ்வு என்னவென்றால், கணிதப் பாடத்திற்கான உதவிப் பேராசிரியர் பணித்தேர்வையும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வையும் ஒரே நாளில் நடத்தவுள்ளதுதான் அந்த நிகழ்வு. இதன் மூலம் போட்டியாளர்கள் பலரும் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின் ஆரம்பத்தில், பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வில் (NET) கணிதப் பாடத் தேர்வு பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதேநாளில், அதே கணிதப் பாடத்திற்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.
பின்பு, தேசியத் தகுதித் தேர்விலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்விலும் கணிதப்பாடத் தேர்வை எழுதுபவர்கள் ஒரே போட்டியாளர்கள் தான். இரு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட்டால், ஏதேனும் ஒரு தேர்வை எழுதும் வாய்ப்பு போட்டியாளர்களிடமிருந்து பறிக்கப்படும் என்றவர் , இச்செயல் அநீதியானது என்று சாடினார்.
தேசியத் தகுதித் தேர்வுக்கான அட்டவணை ஜனவரி 17-ஆம் தேதியே வெளியிடப்பட்டு விட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை பிப்ரவரி 3-ஆம் தேதி தான் வெளியானது. தேசியத் தகுதித் தேர்வு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் கணிதப் பாடத் தேர்வை அறிவித்தது தான் குழப்பங்களுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வு அட்டவணை தயாரிப்பது, முடிவுகளை வெளியிடுவது, இட ஒதுக்கீடு வழங்குவது என அனைத்திலும் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்கிறது என கடிந்த அன்புமணி ராமதாஸ் அவர்கள், இரு வகை தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கணிதப் பாடத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தவும் செய்தார்.