காவிரி பாசன மாவட்டங்களில் சமீபகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டிவிதைத்த இந்நேரத்தில் பெய்த மழை பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனூடே காவிரி பாசன மாவட்டங்களில் சேமித்து வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள 170 மையங்களில் கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகிவிட்டன என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏன் இந்த நிலை என பலரும் வினவிக்கொண்டிருக்க, “நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்பட்ட நெல் மூட்டைகள் அரசின் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது தான் இதற்கு காரணம்” என தன் அறிக்கையில் பதில் அளித்துள்ளார், அன்புமணி ராமதாஸ்..
எப்போது மழை பெய்தாலும் அதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லோ, அரசு கொள்முதல் செய்த நெல்லோ சேதமடைவது வாடிக்கையாகி விட்டது என்ற நிலையையும் அவர் தன் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தினார்.
நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்தது 5000 மூட்டைகள் இருப்பு வைக்க வசதி தேவை என்றவர், கொள்முதல் செய்யப்படும் மூட்டைகள் இரு நாட்களுக்கு ஒருமுறை கிடங்குகளுக்கோ, அரவை ஆலைக்கோ கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் அதற்கான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உயிரைக் குடிக்கும் டாஸ்மாக் கடைகளின் மதுப்புட்டிகளை பாதுகாப்பதில் காட்டப்படும் அக்கறை, உயிரைக் காக்கும் உணவான நெல் மூட்டைகளை காப்பதில் காட்டப்படுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்!