திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலின் போது, நாங்கள் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்தனர்.
ஆனால், தேர்தலில் வெற்றியடைந்து அரியணையில் ஏறியப்பின், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை. இதைச்சார்ந்து கேள்விகள் எழும்புகையில் விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற பதில்களின் மூலம் மழுப்புகின்றன.
சூழல்கள் இப்படியாக இருக்க, தற்போதோ தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
‘இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை விநியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப விநியோகத்தை தடுக்க வேண்டும்’ எனவும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்.