சமீபத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியிருப்பது தமிழகம் முழுவதும் அதிர்வரலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், தமிழக அரசின் சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் நீட் விலக்கு சட்டத்தை திருப்பி அனுப்புவதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆளுநர் கூறியுள்ள காரணங்கள் தேவையற்றவை என்றும் கூறியுள்ளார்.
நீட் விலக்கு சட்டம் தமிழகத்தில் கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார், அன்புமணி ராமதாஸ. மேலும், ஆளுநரின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது எனவும் எந்த அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட்விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு தான் ஆளுநர் அனுப்பியிருக்க வேண்டும் . நீட் விலக்கு சட்டம் ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், இனியும் சர்ச்சைகளும், தாமதங்களும் ஏற்படுவதைத் தடுக்க, சட்டப்பேரவையை அவசரமாக கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்தமின்றியோ சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார், அன்புமணி ராமதாஸ்!