இலங்கை கடற்படையானது கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது. அவர்களை விடுவிக்க கோருகையில், 12 பேருக்கும் தலா ஒரு கோடி செலித்தினால் மட்டுமே பிணையில் வெளியிடப்படுவர் என்று இலங்கை நீதிமன்றமானது உத்தரவிட்டது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கைப்பதிவு
இந்த அதிர்வலைகளுக்கு மத்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சிங்களக் கடற்படையினரால் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை பிணையில் விடுவிக்க, அவர்கள் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதை, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக மீனவர்கள் அறியாமல் எல்லை தாண்டியதைத் தவிர வேறு எந்த குற்றமும் இழைக்கவில்லை. குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக பன்னாட்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று மகிந்த இராஜபக்சே காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படியே இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், உதவி செய்யும் இந்தியாவையே அபராதம் விதித்து இலங்கை அவமதிப்பது கண்டிக்கத்தக்க்து என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ரூ.1 கோடி அபராதம் செலுத்தினால் தான் பிணை என்றால், இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலையாகவே முடியாமல் போய்விடும் என்று வருத்தம் தெரிவித்தவர், மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.