மீனவர்கள் பிரச்சினை, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஓயாது என்பதுப் போல் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அவர்களின் காவல் 21-ஆம் தேதி வரை நேற்று நீட்டிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை மீறி தமிழக மீனவர்களின் 135 படகுகள் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளன எனவும் இரண்டாவது நாளாக இன்றும் படகுகள் ஏலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும் இத்தகைய சூழலில் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் என்றும் அன்புமணி இராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், இந்திய – இலங்கை மீனவர் சிக்கலுக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இலங்கை அமைச்சர் உறுதியளித்த ஒரு சில மணி நேரங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதிலிருந்தே இந்தியாவை இலங்கை எவ்வாறு அவமதிக்கிறது என்பதை உணரலாம் என்றார்.
இப்போது கைது செய்யப்பட்ட 16 பேர், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 21 பேர் என 37 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் ஏலத்தை தடுத்து நிறுத்தி அவற்றையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்.