கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை சரியாக முடிக்க முடியவில்லை என்றே பின்னூட்டங்கள் அதிகம் கிடைத்தன.
பின்னூட்டங்களை அடிப்படையாகக் கொண்டும், கொரோனா பரவலின் வீரியத்தை அடிப்படையாகக் கொண்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தன. மேலும், மாணவர்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளமையால், பள்ளி, கல்லூரிகள் நேரடி முறையிலேயே நடைபெற்று வந்தது. அதோடு, பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி,..
- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது வருகிற மே 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 30 ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது.
- பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
- பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே 28 ஆம் தேதி வரை பொதுத்தேர்வானது நடைபெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.
திருப்புதல் தேர்வு
பொதுத்தேர்வு ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் தற்போது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக திருப்புதல் தேர்வுகள் நடந்துவருகிறது. நடைபெற இருக்கும் பொதுத்தேர்வுக்கு இத்திருப்புதல் தேர்வுகள் மிகவும் உதவும் என்பதால் மாணவர்களும் பொதுத்தேர்வைப் போலவே இத்திருப்புதல் தேர்வுக்கும் தயாராகி இருக்கின்றனர்.
இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் 12ம் வகுப்புக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில், இன்று நடைபெறவுள்ள கணிதப் பாடத்திற்கான வினாத்தாள் நேற்று மதியமே வெளியாகியது. திருப்புதல் தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த இரு வகை வினாத்தாள்களும் கசிந்ததால் மாணவர்களிடத்தில் அதிர்ச்சி காணப்படுகிறது.
அன்புமணி ராமதாஸ்
இக்கசிவுத் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விகளையும், கருத்துகளையும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்வில் அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாகி இருந்தன.
முன்கூட்டியே வினாத்தாள் வெளியானதற்காக ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினாத்தாள் கசிவு தொடர்வதற்கு யார் காரணம்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அடுத்தடுத்து வினாத்தாள் கசிவதால், தமிழக அரசின் தேர்வு முறை மீதே மாணவர்கள் நம்பிக்கை இழந்துவிடக் கூடும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மருத்துவம் தவிர்த்த பிற படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடப்பதால், இதை அரசு எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அடுத்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுகளுக்கான வினாத்தாள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தனார்.