அன்புமணி இராமதாஸ் அவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டுகளிலும் திறமைசாலியானவர். தனது கல்லூரி காலங்களிலேயே கால்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து என அனைத்து விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு மாநில அளவில் பதக்கங்களைப் பெற்றுள்ளார். மேலும் அப்போதே கல்லூரியின் விளையாட்டுத்துறை செயலாளராகவும் அன்புமணி இராமதாஸ் பதவி வகித்துள்ளார்.
அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு இருந்த விளையாட்டுத்துறையின் மீதான அதீத ஆர்வத்தினால் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் இறகுபந்து (பேட்மின்டன்) வீரராக இருந்தார்.
இப்படியான சூழலில்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு புதிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஆம்! அன்புமணி ராமதாஸ் அவர்களின் விருப்ப விளையாட்டுகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் இறகுபந்து விளையாட்டை சார்ந்ததுதான் அந்த பொறுப்பு.
அன்புமணி இராமதாஸ் அவர்கள் தற்போது இந்திய இறகுபந்து சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னம் 2014-ம் ஆண்டில் தமிழ்நாடு இறகுபந்து சங்கத் (Tamilnadu Badminton Association) தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.