மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் 24 இடங்கள் நிரப்பப்படவில்லை. அந்த இடங்களை தமிழக அரசும் நிரப்ப முடியாது. இப்படியாக சூழல் நிலவுவதால், மருத்துவக் கல்லூரியில் சேர இருக்கும் மாணவர்கள் அந்த இடங்கள் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 24 இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதால் அவை யாருக்கும் பயன்படாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மருத்துவ இடத்திற்கும் சுமார் ஒரு கோடி செலவிடப்படுகிறது என்றும், மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்துக்கிடக்கின்றனர் என்றும், இத்தகைய சூழலில் தவறான கொள்கைகளால் விலைமதிப்பற்ற 24 மருத்துவ இடங்கள் பயனற்றுக் கிடப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மாநிலத்திற்கே திருப்பி அனுப்பப்படுவது தான் வழக்கமாக இருந்தது என முந்தைய வழக்கத்தையும் நினைவு கூர்ந்தார், அன்புமணி ராமதாஸ். மேலும், நடப்பாண்டு முதல் அந்த இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்படக்கூடாது என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தான் இந்த நிலைக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, ஏற்கனவே இருந்தவாறு அகில இந்திய தொகுப்பில் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மாநில அரசு கல்லூரிகளிடமே ஒப்படைக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அகில இந்திய தொகுப்பை ரத்து செய்து விட்டு, அனைத்து இடங்களையும் மாநில அரசுகளே நிரப்ப அனுமதிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதையும் தெரிஞ்சுக்கோங்க; குழைந்த மனம் கொண்ட ஓநாயின் வாரிசு : சைபீரியன் ஹஸ்கி ஒரு சிறப்பு பார்வை!