37- ஆவது நாடாளுமன்ற அலுவலக மொழிக்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மத்திய அரசு பல்வேறு வகைகளில் இந்தியை நாடு முழுவதும் உள்ள மக்கள் பேச வேண்டும் என்று நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. பல போராட்டங்களை மத்திய அரசுக்கு எதிராக நிகழ்த்தி உள்ளன.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேச வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பல உள்ளூர் மொழிகளில் இருந்து வரும் புதிய வார்த்தைகளை இந்தி மொழியில் சேர்த்தால் இந்தி நெகிழும் என்றும் தெரிவித்தார். அரசாங்கத்தை வழிநடத்தும் அலுவலக மொழியாக இந்தி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும், இது இந்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் எனவும் நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தி மொழியை மாற்ற நேரம் வந்துவிட்டதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், பிற மொழிகள் பேசும் மாநில பொதுமக்கள், அவர்களுக்குள் தொடர்புகொள்ள இந்தியில் பேச வேண்டும் என்றார். மத்திய அமைச்சரவையின் 70 சதவிகித செயல்பாடுகள் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறியிருக்கிறார். வடகிழக்கின் எட்டு மாநிலங்களில் 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அமித்ஷா விழாவில் பேசியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமித்ஷாவின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.