தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. தேர்தல் நடத்தப்படும் நாளான 19 ஆம் தேதி ஒழுங்கான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளில் ஒன்றாகத்தான் அடுத்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாளில் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 19 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 ஆம் தேதி 50 சதவீதத்துக்கும் மேல் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி ஆணையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19ம் தேதி நடக்க உள்ளது. எனவே அரசின் உத்தரவின் பேரில் 19ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், 18ம் தேதி தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தவிர, பிற ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். 50 சதவீதத்துக்கும் மேல் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கும் பள்ளிகளுக்கு 18ம் தேதியும் விடுமுறை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.