அஜித்குமார் ரசிகர்களின் பல நாள் காத்திருப்பாய் இருந்த வலிமை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அஜித்குமார் இரசிகர்கள் திரையரங்குகளில் செய்த கொண்டங்களினால் தமிழகத்தில் வலிமை திரைப்படம் வெளியான பல திரையரங்குகளும் நேற்று திருவிழாக்கோலம் பூண்டன. அஜித்குமார் அவர்களை அவரது இரசிகர்கள் 932 நாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
வலிமை திரைப்படத்தை எச்.வினோத் அவர்கள் இயக்க, மறைந்த நடிகை ஶ்ரீதேவி அவர்களின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்திற்கு நிரவ்ஷா அவர்கள் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
வலிமை திரைப்படத்திற்கு தமிழகத்தில் இருந்த எதிர்பார்ப்பு பற்றி எவருக்கும் எவரும் சொல்லித்தெரிய தேவையில்லை. சமூக வலைத்தளத்தில் கடந்த பல மாதங்களாக வலிமை திரைப்படம் பற்றிய செய்திகள் அவ்வபோது வந்த வண்ணம் மட்டும் அல்லாது ட்ரெண்டிங்கிலும் இருந்து வந்தன. இப்படியாக பல எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருந்த வலிமை முதல் நாள் வசூலில் பெரும் சாதனை படைக்கும் என்று பலரும் கணித்து வைத்திருந்தனர். அதன்படியே வலிமை முதல்நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதுவரை வெளிவந்த அத்தனை தமிழ்படங்களின் சாதனைகளையும் வலிமை திரைப்படம் முறியடித்துள்ளது. ஆம்! இதுவரை வெளிவந்த கூற்றுகளின்படி சென்னையில் மட்டும் வலிமை 1.82 கோடி வசூலித்துள்ளது. மேலும் வலிமை முதல் நாளில், தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய். 36.17 கோடியை வசூலித்துள்ளது என்று அறியப்பட்டுள்ளது. உலகளவில் வசூலை கணக்கிட்டால் ரூ. 45 முதல் 50 கோடி அளவில் வலிமை வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் தமிழகத்தில் வலிமை திரைப்படம்தான் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதி தரப்பட்டது வலிமை படத்தின் வசூலுக்கு பெரிய உதவியாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.