அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (aicte) பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக இந்திய மாணவர்கள் 20 ஆயிரம் பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். மாணவர்கள் உயிர்தப்பினாலும் அவர்களின் கல்விநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் கல்விக் கனவு என்ன ஆவது என்ற கேள்விகள் அவ்வபோது எழுப்பப்பட்டு வந்தது.
மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்தியாவில் படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தனர். மேலும் சில வெளிநாடுகளில் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அப்போது கூறப்பட்டு வந்தது. குறிப்பாக உக்ரைனில் மீண்டும் சென்று படிப்பைத் தொடர முடியாத சூழல் அங்கு நிலவி வருகிறது. மாணவர்களும் இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் உக்ரைனில் இருந்து திரும்பிய பொறியியல் மாணவர்களுக்கு நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு படிப்பைத் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் காலியிடங்களுக்கு ஏற்ப அவர்களை அனுமதிக்கலாம் எனவும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது, அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம். மேலும், மாணவர்கள் எந்த ஆண்டுகளில் பயின்று வந்தார்களோ அதே ஆண்டில் படிப்பை இங்கு தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வியாண்டில் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம்.
இது பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கான அறிவிப்பு தான். நாடு திரும்பிய பிற மருத்துவ மாணவர்கள் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை. அவர்களுக்காக வாய்ப்புகள் என்ன எப்படி அளிக்க போகிறார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே தான் உள்ளது.