குழந்தைகளை ஒன்றாம் வகுப்புக்காக பள்ளியில் சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டு குழந்தைகளின் அடிப்படைக் கட்டத்தில் அவர்களின் கற்றலை வலுப்படுத்த பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 3 முதல் 8 வயது இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2 ஆண்டுகள் ப்ரீ-ஸ்கூல் மற்றும் 2 ஆண்டுகள் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அங்கன்வாடிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான அடிப்படைக் கல்வியை மூன்றாண்டுகளுக்கு கொடுப்பதன் மூலமாக அவர்களுக்கான அடிப்படை கற்றல் மேம்படும் என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும் குழந்தைகளின் வயது மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற பாடத்திட்டமும், கற்பித்தலில் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் இருப்பும், இந்த அடிப்படைக் கற்றலை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக அமைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதனால், அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்த வேண்டும். அதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம், பாலர் கல்வியில் (DPSE) இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்பிற்கான செயல்முறையைத் தொடங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த பாடத்திட்டம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) மூலமாக வடிவமைக்கப்பட்டு, அதன் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) மூலம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை வாரி வாரி இரைக்கும் திமுக; ஜெயக்குமார் குற்றச்சாட்டு!