ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டில் ஏவப்பட்ட ‘ஓரியன்’ விண்கலம் பூமியை 9 மணி நேரத்திற்கு பிறகு புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
அமரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.
இந்நிலையில், மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியுள்ளது. அதன்படி, ‘ஆர்டெமிஸ்’ என்ற திட்டத்தை நாசா ஆரம்பித்துள்ளது. அதாவது 2025 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் முதற்கட்ட சோதனையாக செயற்கையான மனித மாதிரிகளை வைத்து ‘ஆர்டெமிஸ் 1’ ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பியுள்ளது. இந்த ராக்கெட் ஓரியன் என்று விண்கலத்தை சுமந்து செல்கிறது.
முன்னதாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்த சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டதிலிருந்து அடுத்தடுத்த பல இயந்திர மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளை சந்தித்து வந்ததால் சோதனை முயற்சி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று நவம்பர் நள்ளிரவு ராக்கெட்டை செலுத்த தயாரான போது 6 மணி அநேரம் முன்பாக, ராக்கெட்டில் திடீரென ஹைட்ரஜன் வாயு கசிவு கண்டறியப்பட்டது. பிறகு, இந்த வாயு கசிவை சரி செய்யும் பணியில் சிவப்பு குழு எனப்படும் பணிக்குழு தொடர்ந்து செயல்பட்டது.
இதையடுத்து அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்று மதியம் 12.17 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆர்டெமிஸ் 1 விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்ட 8 நிமிடங்களுக்கு பிறகு, ராக்கெட் தனியாக பிரிந்து ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி பயணித்தது. ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வருகிற நவம்பர் மாதம் 21 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி நிலவின் மேற்பரப்புக்கு அருகில் 60 ஆயிரம் மைல் தொலைவில் செல்லும் ஓரியன் விண்கலம் டிசம்பர் 11 ஆம் தேதி பூமிக்கு திரும்புகிறது.
இந்நிலையில், விண்ணில் செலுத்தப்பட்டு 9 மணி பயணத்துக்கு பின் சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் ஓரியன் விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அதனை அனுப்பியுள்ளது. கடந்த 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவுக்கு செல்லும் விண்கலம் ஒன்று பூமியை புகைப்படம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: நாளை விண்ணில் செல்ல காத்திருக்கும் நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்