இயற்கை உரங்களில், மண்புழு உயிர் உரமானது மிக முக்கியமான ஒன்று. இரசாயன உரங்களின் பயன்பாட்டால், மண்ணில் இருக்கு நுண்ணுயிரிகள் அழிந்து வருவதோடு, மண்ணின் வளமும் கெடுகிறது. இதனால், விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் தரமற்றதாக உருவாக்கப்படுகிறது.
பழங்கால விவசாயத்தில் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி வந்தனர் நம் முன்னோர்கள். இதனால், அதிகமாக உற்பத்தி செய்ததோடு, மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதிகரித்து வரும் மக்கட்தொகைக்கு ஏற்ப, பசுமைப்புரட்சியின் விளைவாக அதிக சாகுபடி தரக் கூடியதும், இரசாயன உரங்களால் அதிக பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டது.
இயற்கையாக கிடைக்க கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு, குடலில் இருக்கும் நுண்ணுயிர், நொதிகள் உதவியோடு மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறிய உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படுகின்ற கட்டிகளே மண்புழு உரம் ஆகும். இந்த மண்புழு உரங்கள், இயற்கை விவசாயத்தை தழைத்தோங்கச் செய்வதால் தான், “விவசாயிகளின் நண்பன்” என அழைக்கப்படுகிறது.
மண்புழு உரத்தின் பயன்கள்
விளைநிலத்தில் மண்புழு உரம் இடுவதால், மண் துகள்கள் ஒன்றிணைந்து, ஒட்டி, குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தும். இதனால், மண்ணின் உடைய காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறனும் மேம்படுத்தப்படும். களிமண்ணில் உள்ள குழம்புத் தன்மையை குறைக்கிறது. மண் அரிப்பு மற்றும் கோடை காலத்தில் மண்ணின் வெப்பநிலையை குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதை தடுக்கிறது.
வாழை, தென்னை, கரும்பு மற்றும் பழப்பயிர்களில் எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா மற்றும் மா போன்றவை கோடை காலத்தில் முழுமையாக பாதுகாக்கப்பட மண்புழு உரம் தான் பெரிதும் உதவுகிறது. மழைக் காலத்தில், மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் மண்புழு உரம் உதவுகிறது. இதனால், சத்துக்களை எடுத்துக் கொள்ளும் புது வேர்கள் உருவாவதற்கு மண்புழு உரம் உதவுகிறது. இதனால் பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு.
மண்புழு உரத்தினால் உருவாகும் அமிலமும், கார்பன்- டை- ஆக்சைடு வாயுவும் மண்ணின் காரத் தன்மையை குறைத்து, உரப்பிடிப்புத் திறனை மேம்படுத்தும். மண்ணில் இருக்கும் கரையாத தாதுக்களை, கரைய வைத்து தாவரங்களுக்கு ஊட்டச் சத்தாக மாற்றித் தருகிறது.
மண்ணிற்கு பேரூட்டச் சத்துக்களை அளிப்பதோடு, தாவரங்களுக்கு தேவைப்படும் எல்லா விதமான நுண்ணூட்டச் சத்துக்களையும் அளிக்கிறது. மண்ணில் இருக்கக் கூடிய தீங்கு விளைவிக்கும் கன உலோகங்களை தாற்காலிகமாக ஈர்த்து வைத்துக் கொண்டு, தூய்மையான நிலத்தடி நீர் மற்றும் பயிர்களுக்கான ஊட்டச் சத்துக்களையும், ஆற்றலையும் அளித்து மண்வளத்தை மேம்படுத்த உதவுகிறது.
மண்புழு உரத்தால் மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை உயர்வதால், பயிரானது கோடையிலும், நல்ல முறையில் பாதுகாக்கப்படும். மண்புழு உரத்தினை மண்ணில் இடுவதால், மண்வளம் இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. பூச்சி நோய்த் தாக்குதலை குறைக்க உதவுகிறது. நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்ய பெரிதும் உதவுகிறது. மண்புழு உரம் பயன்படுத்தினால், மண்ணில் உப்பு கடத்தும் திறன் உயர்ந்து, கார அமிலத் தன்மை சீர்படும்.
மண்புழு உரத்தில் உள்ள ஆக்ஸின் மற்றும் சிஸ்டோஹைனின் போன்றவை பயிர்களை வளரச் செய்கிறது. ஜிபிரிலின் பயிரைப் பூக்கச் செய்கிறது. மண்புழு உரத்தில் அதிகமாக காணப்படும் கியூமிக் அமிலம் வேர் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் பயிருக்குத் தேவையான உரங்கள் அனைத்தையும் மண்ணில் இருந்து எடுக்க உதவுகிறது. மண்புழு உரம் இடுவதால் மக்காச்சோளம், கம்பு, சோளம், பருத்தி மற்றும் சிறுதானியப் பயிர்களின் மகசூல் அதிகரித்து, வறட்சியையும் தாங்கி வளர பயன்படுகிறது.
விவசாயிகள் விளைநிலத்தின் மண்ணைப் பரிசோதனை செய்து, பயிருக்கேற்ற உரங்களை, பரிந்துரைக்கப்பட்ட அளவில் இட்டு, செலவைக் குறைத்து மகசூல் எடுக்ககலாம்.
ஏவுகணைக்கு அருகில் நின்று முகச்சவரம் செய்த உக்ரைன் குடிமகன்..