சிவகார்த்திகேயன் என்ற பெயர் தற்போது தமிழ் திரையுலகின் வெற்றி நட்சத்திரங்களின் பெயர் பட்டியலில் உள்ளது. வெள்ளித்திரைக்கு வந்தப்பின் குறுகிய காலக்கட்டத்திலேயே மிகப்பெரிய ரசிக பட்டாளத்தை சிவகார்த்திகேயன் உருவாக்கினார் என்றே சொல்ல வேண்டும்.
மெரினாவில் ஆரம்பித்த வெள்ளித்திரைப் பயணமானது இன்று வரை வெற்றிகரமாகவே தொடர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை. மேலும் வெறுமனே வெற்றிப்படங்களை மட்டுமேதான் சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கிறாரா என்றால், நிச்சயம் அதுவும் இல்லை. அதே சமயம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் சில படங்களே தோல்வியைத் தழுவியுள்ளன.
அந்த சில திரைப்படங்களில் “மிஸ்டர் லோக்கல்” திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்குனர், ராஜேஷ் அவர்கள் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா அவர்கள் தயாரித்திருந்தார். மேலும், இப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார்.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டு உருவான இத்திரைப்படமானது சொல்லும் அளவிற்கு வெற்றிபெறவி்ல்லை என்பதே உண்மை. இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு இப்படத்தில் நடித்ததற்காக முழு சம்பள பணத்தையும் வழங்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. அதை நிரூபனம் செய்யும் வகையில், சிவகார்த்திகேயன் தற்போது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பதற்காக பேசப்பட்ட சம்பளத்தில் இருந்து இன்னமும் நான்கு கோடி தரவில்லை என்றும், அந்த சம்பளத்தை பெற்றுத்தருமாறும், மேலும் அந்த சம்பளத்திற்கான டிடிஎஸ் வருமானவரித்தொகையை பெற்றுத்தருமாறும் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்புகாரில், அந்த சம்பள பாக்கியை ஞானவேல் ராஜா கொடுக்கும்வரை அவர் தயாரிக்கும் படங்களில் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் அவரது படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்துள்ள தகவலின்படி, மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு மொத்தமாய் 15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் 11 கோடி மட்டுமே தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து தரப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் இப்புகாருக்கு ஞானவேல்ராஜா அவர்கள் பதில் அளித்துள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்றும் ஆனால் சிவகார்த்திகேயன் இயக்குனராக ராஜேஸ் தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அவரை வைத்து தயாரித்ததாகவும் அதனால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர, நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது. அக்கேள்வியின்படி, டிடிஎஸ் தொடர்பாக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து ஏன் மனுதாக்கல் செய்துள்ளீர்கள்? என்றும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும்போது மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன் என்றும் சிவகார்த்திகேயன் தரப்பிற்கு நீதிபதிகள் கேள்விகளை முன்வைத்தனர். இக்கேள்விகளால் சிவகார்த்திகேயன் தரப்பானது சற்றே அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.