சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி ஆன்லைன் தரிசனம் இல்லை என சபரிமலை தேவசம்போர்ட் அறிவித்திருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் தேதி பொதுமக்களுக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் 27 ஆம் தேதி வரை முதல் 11 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் முதல் 30 நாட்களில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கேரள அரசு பல முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது, சபரிமலையில் 18 ஆம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் வீதம் ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்கள் வரை மேலே சென்று சாமி தரிசனம் செய்ய தேவசம் போர்ட் ஏற்பாடு செய்திருக்கிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரத்தை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கும் நடை சாத்தப்படும்.
இதனிடையே, பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி ஆன்லைன் தரிசனம் இல்லை என சபரிமலை தேவசம்போர்ட் அறிவித்திருக்கிறது.
சமூக நீதியை செயலில் காட்ட பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்; வானதி சீனிவாசன்